Published : 06 Nov 2020 04:53 PM
Last Updated : 06 Nov 2020 04:53 PM

புதிய கல்விக் கொள்கை உலகத்துக்கே தலைமைப் பண்பை அளிக்கும்: அமைச்சர் பொக்ரியால் புகழாரம்

புதிய கல்விக் கொள்கை சமத்துவம், தரம் மற்றும் எளிதான அணுகுமுறையைக் கொண்டது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் புகழாரம் சூட்டியுள்ளார்.

அமிதி பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதற்காக மெய்நிகர் முறையில் நடைபெற்ற தொடக்க விழாவில் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

’’புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்த ஆர்வம் தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் உள்ளது. இந்தக் கல்விக் கொள்கை இறந்த காலத்தை எதிர்காலத்துடன் இணைப்பதுடன் இந்தியாவை உயர்த்துவதில் கவனம் செலுத்துகிறது. கல்வி அதன் நோக்கத்தை அடைய, நம் நாடு கல்விக் கொள்கையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பரந்த பார்வையில் நீங்கள் கல்விக் கொள்கையைப் பார்த்தால், அது சர்வதேசத் தரம் கொண்டதாக இருக்கும். பயனுள்ள, எல்லாவற்றையும் உள்ளடக்கிய மற்றும் கலந்துரையாடும் அம்சங்கள் கொண்டதாக இருக்கும். இக்கொள்கை சமத்துவம், தரம் மற்றும் எளிதான அணுகுமுறையைக் கொண்டது.

அதேபோல புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கிறது. மற்ற எந்த மொழிகளையும் விட தாய்மொழிக் கற்றல் சிறப்பானது. இதனால் தொடக்கக் கல்வி தாய்மொழியில் இருக்கும். பிறகு வேண்டுமெனில் மற்ற மொழிகளில் படிக்கலாம்.

புதிய கல்விக் கொள்கை தனி நபருடையதோ அல்லது ஓர் அரசாங்கத்தின் கல்விக் கொள்கையோ அல்ல. இது உலகத்துக்கே தலைமைப் பண்பை அளிக்கும் தேசத்தின் கல்விக் கொள்கை.’’

இவ்வாறு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x