Published : 06 Nov 2020 01:01 PM
Last Updated : 06 Nov 2020 01:01 PM

கூடுதல் வேலை நாட்கள்; விடுதி மாணவர்களுக்குக் குவாரன்டைன்; கல்லூரிகள் திறப்பு குறித்து யுஜிசி விதிமுறைகள் வெளியீடு -முக்கியத் தகவல்கள்

கரோனா தளர்வுகளின்படி நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. இந்த வழிமுறைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய கல்வி அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைப் படிப்படியாகத் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

* வகுப்புகள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் கற்பிக்கப்பட வேண்டும். சுழற்சி முறையில், வகுப்புகளில் அதிகபட்சம் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டியது அவசியம்.

* தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும்.

* கல்வி நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் இயங்கலாம்.

நுழைவு மற்றும் வெளியேறும்போது பின்பற்ற வேண்டியவை

* கல்வி நிறுவனங்களுக்குள் செல்லும்போதும் வெளியே வரும்போதும் கூட்டம் தவிர்க்கப்பட வேண்டும். இதற்காக ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் வெவ்வேறு கால நேரம் நிர்ணயிகப்பட வேண்டும்.

* மாணவர்கள் வரிசையில் நிற்பதை உறுதிசெய்யக் குறைந்தது 6 அடி இடைவெளியில், தரையில் குறிப்பிட்ட அடையாளங்களை உருவாக்கி அதில் மாணவர்களை நிற்க வைக்க வேண்டும்.

* மாணவர்கள், பேராசிரியர்கள், பிற ஊழியர்கள் உட்பட வளாகத்தில் உள்ள அனைவரும் முகக்கவசம், தனிமனித இடைவெளி, கிருமிநாசினிப் பயன்பாடு உள்ளிட்ட கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். அவற்றை நுழைவுவாயிலிலேயே உறுதி செய்ய வேண்டும்.

வகுப்பறைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள்

* கல்வி நிறுவன வளாகங்களை நன்கு தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். கதவு கைப்பிடி, லிஃப்ட் பொத்தான்கள், மாடிப்படி, நாற்காலிகள், இருக்கைகள், கழிப்பறைச் சாதனங்கள் உள்ளிட்ட அடிக்கடி தொடும் இடங்களைத் தொடர்ச்சியாகக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

* கரோனா பரவல் சூழலில் கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக வர மாணவர்களுக்குச் சற்று தயக்கம் இருக்கலாம். இதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குப் பேராசிரியர்கள் குழு உளவியல் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

* வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்பாகத் தெர்மல் ஸ்கேனர் மூலம் மாணவர்களின் வெப்பநிலையைச் சோதிக்க வேண்டும்.

* வகுப்புகளில் 50 சதவீத மாணவர்களைக் கொண்டு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம். தேவைப்பட்டால் வாரத்தில் ஆறு நாள்கள் கூட வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம்.

* அனைத்து வகுப்புகள், ஆய்வகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பிற பொதுவான பகுதிகளை வகுப்புகள் தொடங்கும் முன்னும் முடிந்த பின்னரும் சுத்தப்படுத்த வேண்டும். 70 சதவீத ஆல்கஹால் கொண்டு கற்பித்தல் உபகரணங்கள், கணினிகள், பிரின்ட்டர்கள் இன்ன பிறவற்றைச் சுத்தப்படுத்த வேண்டும்.

* இருக்கைகள், ஆய்வகங்கள், கணினி அறைகள், நூலகங்கள் உள்ளிட்ட உட்காரும் இடங்கள் குறிக்கப்பட்டு அங்கு தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

வளாகத்துக்கு உள்ளே கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்

* கலை நிகழ்ச்சிகள், சந்திப்புகள் தவிர்க்கப்பட வேண்டும். எனினும், கூடுதல் திறன் வளர்ப்புச் செயல்பாடுகள், விளையாட்டுகள் ஆகியவற்றை உரிய தனிமனித இடைவெளியோடு நடத்தலாம்.

* பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள், பிபிஇ உடைகள், கையுறைகள் ஆகியவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

* உரிய கட்டுப்பாடுகளுடன் உடற்பயிற்சிக் கூடங்களை அனுமதிக்கலாம். எனினும் நீச்சல் கூடங்களுக்கு அனுமதியில்லை.

விடுதிகள்

* முறையான பாதுகாப்பு மற்றும் உடல்நல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி விடுதிகளைத் திறக்கலாம். எனினும் விடுதிகளில் அறைகளைப் பகிர்ந்து கொள்ள அனுமதியில்லை.

* தொற்று அறிகுறி கொண்ட மாணவர்களுக்கு எக்காரணம் கொண்டும் விடுதிகளில் அனுமதி கிடையாது.

* வெவ்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரிக்கு வரும் விடுதி மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதன்பிறகே வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.

* விடுதிகளில் கூட்டம் கூடுவதற்கு அனுமதி இல்லை. கூட்டத்தைத் தவிர்க்கக் குறைவான மாணவர்களே அழைக்கப்பட வேண்டும். அதேபோல படிப்படியாகவே விடுதிகளுக்கு அவர்கள் அழைக்கப்படல் வேண்டும்.

* சாப்பிடும் இடங்களில் தூய்மையைப் பராமரிக்க வேண்டும். சிறு குழுக்களாக உணவு பரிமாறப்பட வேண்டும். மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் எடுத்துச் சென்று சாப்பிடும் வசதியைக் கட்டாயம் அளிக்க வேண்டும்.

**

* மாணவர்கள் தங்களின் உடல்நிலையில் ஏதாவது மாறுபாட்டை உணர்ந்தால் அதுகுறித்துப் பேராசிரியர்களிடம் முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டியது அவசியம். அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

* கல்வி நிறுவனங்களில் மாணவர்கள், பேராசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தலையாய கடமையாகும். இதைக் கருத்தில் கொண்டு உரிய வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x