Published : 05 Nov 2020 01:25 PM
Last Updated : 05 Nov 2020 01:25 PM

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

கரோனா தொற்றுப் பரவல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடெட்) ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.

இதற்கிடையே சிடெட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தள்ளிவைக்கப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு 2021 ஜனவரி 31-ம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ''நாடு முழுவதும் 112 நகரங்களில் கடந்த ஜூலை மாதம் நடத்தத் திட்டமிடப்பட்ட மத்திய ஆசிரியர் தேர்வு கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இந்தத் தேர்வு அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 31-ம் தேதி நடைபெறும். பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்கு வசதியாக, தேர்வு கூடுதலாக 23 நகரங்கள் சேர்த்து மொத்தம்135 நகரங்களில் நடத்தப்படும்'' எனத் தெரிவித்தார்.

கூடுதல் தகவல்களுக்கு: https://ctet.nic.in/

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x