Last Updated : 04 Nov, 2020 04:46 PM

 

Published : 04 Nov 2020 04:46 PM
Last Updated : 04 Nov 2020 04:46 PM

சிஏ தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முடியாது: உச்ச நீதிமன்றத்திடம் ஐசிஏஐ பதில்

சிஏ தேர்வுகளை ஆன்லைனில் நடத்தமுடியாது என்று உச்ச நீதிமன்றத்திடம் இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு (ஐசிஏஐ) தெரிவித்துள்ளது.

இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் சார்பில் சிஏ எனப்படும் கணக்குத் தணிக்கையாளர் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, கோவிட்-19 பரவல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. பிறகு பிஹார் தேர்தல் காரணமாக மீண்டும் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், சிஏ படிப்புகளுக்கான தேர்வுகள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை தேர்வு மையங்களில் நடைபெற உள்ளன.

கரோனா காரணமாக சிஏ தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று மனுதாரர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று நீதிபதிகள் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கண்ணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஐசிஏஐ சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் ராம்ஜி ஸ்ரீனிவாசன், ''தேர்வுகள் மற்ற நுழைவுத் தேர்வுகளைப் போலத் தேர்ந்தெடுக்கும் பதிலாக இருக்காது. பதிலை மாணவர்கள் எழுத வேண்டி இருப்பதால் ஆன்லைனில் நடத்த முடியாது. மாணவர்களின் நலனுக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்று குறிப்பிட்டார்.

இதை விசாரித்த நீதிபதிகள் மனுதாரரிடம், “இதை எவ்வாறு அனுமதிக்க முடியும்? நீதிமன்றங்கள் பல விஷயங்களை அனுமதிப்பதால், நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அது நடைபெற வேண்டும் என்று கேட்க முடியாது. உங்கள் கோரிக்கைகளில் நியாயமாக இருங்கள்’’ என்று தெரிவித்தனர்.

மனுதாரர்கள் எழுப்பிய குறைகள் குறித்த அனைத்துத் தகவல்களையும் ஐசிஏஐ இணையதளத்தில் குறிப்பிடுவதோடு, தேர்வுகளைப் பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்று இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பிடம் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x