Published : 04 Nov 2020 01:49 PM
Last Updated : 04 Nov 2020 01:49 PM

கரோனா உறுதியான பிறகும் ஆம்புலன்ஸில் அமர்ந்து அரசுத் தேர்வை எழுதிய இளம்பெண்: குவியும் பாராட்டு

திருவனந்தபுரம்

தனக்குக் கரோனா தொற்று உறுதியான பிறகும் ஆம்புலன்ஸில் அமர்ந்து அரசுத் தேர்வை எழுதிய இளம்பெண் கோபிகாவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கோபிகா கோபன். கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மலையாள உதவிப் பேராசிரியர் பணிக்காகப் படித்துக் கொண்டிருந்தார். கடந்த ஜூலை மாதம் நடைபெறுவதாக இருந்த இந்தத் தேர்வு, கரோனா தொற்று அச்சம் காரணமாகத் தள்ளிப் போனது.

இதற்கிடையே நவ.2-ம் தேதி (திங்கட்கிழமை) தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்வுக்கு மும்முரமாகத் தயாராகி வந்த கோபிகாவுக்குத் திடீரெனக் கரோனா தொற்று ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை அன்று அவருக்குத் தொற்று உறுதியானது.

கரோனாவால் தேர்வு எழுதுவதைக் கைவிட கோபிகா தயாராக இல்லை. அரசு அதிகாரிகளிடம் இதுகுறித்துப் பேசியவருக்கு, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. அரசுப் பள்ளியில் தேர்வு நடைபெற்ற நிலையில், கோபிகா தனியாக ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டார்.

பள்ளிக்கு முன்பாக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் ஆம்புலன்ஸில் அமர்ந்தவாறே அரசுத் தேர்வு எழுதினார் கோபிகா. இதுகுறித்துப் பேசியவர், ''தேர்வெழுத ஆரம்பித்ததும் சுற்றுப்புறம் நினைவில் இல்லை. திருப்தியாகத் தேர்வை எழுதி முடித்தேன்'' என்றார்.

தனக்குக் கரோனா தொற்று உறுதியான பிறகும் ஆம்புலன்ஸில் அமர்ந்து அரசுத் தேர்வை எழுதிய இளம்பெண் கோபிகாவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர், தனது ட்விட்டர் பக்கத்தில் கோபிகாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x