Published : 03 Nov 2020 12:32 PM
Last Updated : 03 Nov 2020 12:32 PM

அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை: தமிழக அரசு கடிதம்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு 2017-ல் கொண்டு வந்தது. இத்திட்டத்தின்கீழ் தேர்வாகும் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி மற்றும் பல்வேறு சலுகைகள் தரப்படும். அதன்படி தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து பெறத் தேர்வானது. ​​எனினும் மாநிலப் பல்கலைக்கழகம் என்பதால் பாதி நிதியை மாநில அரசே வழங்கவேண்டும் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுக்க உயர்கல்வி உட்பட 5 துறை அமைச்சர்கள் மற்றும் 3 செயலர்கள் கொண்ட குழுவை உயர் கல்வித்துறை அமைத்தது. அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், சி.விசண்முகம் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பிடித்தனர்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று மத்திய அரசுக்கு 5 அமைச்சர்கள் குழு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.​ அந்தக் கடிதத்தில், ''அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையில் உள்ளது. அதனால் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை. பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பா கூறும் ஆலோசனைகள் ஏற்புடையதாக இல்லை. பல்கலைக்கழகமே தேவையான நிதியைத் தானே சுயமாக திரட்டிக் கொள்ள இயலாது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்றும் கல்விக் கட்டணம் உயரும் எனவும் கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x