Published : 31 Oct 2020 01:38 PM
Last Updated : 31 Oct 2020 01:38 PM

நீட் இலவசப் பயிற்சி ஓரிரு நாட்களில் தொடங்கும்; ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் பதிவு- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

நீட் இலவசப் பயிற்சி ஓரிரு நாட்களில் தொடங்கும் எனவும் பயிற்சிக்காக ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நீட் தேர்வில் பயிற்சி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி தேவை என்னும் அந்தப் பட்டியலில் நேற்று வரை 9,842 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் கூடுதலாகப் பதிவு செய்துள்ளனர்.

ஆன்லைன் விண்ணப்பப் பதிவு முடிவு பெற்றபின் ஓரிரு நாட்களில் அரசு சார்பில் நீட் பயிற்சி தொடங்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முழுமையாகப் பயிற்சி வழங்கும் வகையில், அவர்களுக்கு விரைவிலேயே பயிற்சியைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகளைத் திறப்பதற்குத் தற்போதைக்கு சாத்தியக் கூறுகள் இல்லை. நடப்புக் கல்வி ஆண்டில் மட்டும் அரசுப் பள்ளிகளில் 5 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x