Published : 30 Oct 2020 05:15 PM
Last Updated : 30 Oct 2020 05:15 PM

ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 50 எம்பிபிஎஸ் இடங்கள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒதுக்கியது

ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் உள்ள உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 50 எம்பிபிஎஸ் இடங்களை ஒதுக்கி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஜம்மு மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் விஜய்பூர் தாலுக்காவில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்குக் கடந்த ஆண்டு பிப்.3-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்கான கட்டிட வேலைகள் 2023-ம் ஆண்டு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், சம்பா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, 2020- 21 ஆம் கல்வி ஆண்டில் 50 எம்பிபிஎஸ் இடங்களை ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''வாழ்த்துகள் ஜம்மு! விஜய்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையில், 50 மாணவர்களுடன் முதல் கல்வியாண்டைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜம்மு எய்ம்ஸின் முதல் இயக்குநரை நியமிப்பது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன'' என்று தெரிவித்துள்ளார்.

ஜம்மு எய்ம்ஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 50 இடங்களில், 13 இடங்கள் ஓபிசி பிரிவுக்கும் 5 இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. பொதுப் பிரிவினருக்கு 22 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 7 இடங்கள் பட்டியல் இனத்தவருக்கும் 3 இடங்கள் பழங்குடி இனத்தவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x