Published : 27 Oct 2020 06:27 AM
Last Updated : 27 Oct 2020 06:27 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடக்கம்: நவ.2-க்குள் கல்லூரியை மாணவர்கள் உறுதிசெய்ய வேண்டும்

சென்னை

எம்பிபிஎஸ், பிடிஎஸ் அகிலஇந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்குகிறது. மாணவ, மாணவிகள் பதிவு செய்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்று மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

15 சதவீத இடங்கள்

நாடு முழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள்மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2020 - 21-ம்கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) www.mcc.nic.in என்றஇணையதளம் மூலமாக ஆன்லைனில் நடத்துகிறது.

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் முதல்கட்ட கலந்தாய்வுக்கு அக்.27-ம் தேதி (இன்று) முதல் நவ.2-ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்து, கல்லூரிகளை தேர்வுசெய்யலாம். இவ்வாறு தேர்வு செய்த கல்லூரியை வரும் 28-ம் தேதி (நாளை) முதல் நவ. 2-ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும். தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடஒதுக்கீடு செய்யும் பணிகள் நவ.3, 4-ம் தேதிகளில் நடைபெறும்.

2-ம் கட்ட கலந்தாய்வு

இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் நவ. 5-ம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வில் இடங்களை பெற்றவர்கள் நவ.6-ம் தேதி முதல் 12-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

2-ம் கட்ட கலந்தாய்வுக்கு நவ.18-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை இணையதளத்தில் பதிவுசெய்யலாம். நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு டிச.10-ம்தேதி முதல் 14-ம் தேதி வரை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் முதல்கட்ட கலந்தாய்வுக்கு அக்.27-ம் தேதி (இன்று)முதல் நவ.2-ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்து, கல்லூரிகளை தேர்வுசெய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x