Published : 21 Oct 2020 06:56 PM
Last Updated : 21 Oct 2020 06:56 PM

1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நவ.2 முதல் பள்ளி: ஆந்திர முதல்வர் அறிவிப்பு

1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நவ.2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பள்ளிகள் மூடப்பட்டன. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் முதல் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அக்.15-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளே இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் வரும் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டார். அதன்படி, ''1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஒற்றைப்படை எண்களில் உள்ள வகுப்புகளுக்கு ஒரு நாளும், இரட்டைப் படை வகுப்புகளுக்கு அடுத்த நாளும் பள்ளிகள் திறக்கப்படும்.

காலை நேரத்தில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும். 750-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஒருமுறை திறக்க அனுமதிக்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும்போது மதிய உணவை வழங்க வேண்டும்.

இந்தத் திட்டம் நவம்பர் மாதத்திற்கு மட்டுமே அமலில் இருக்கும். அதன்பிறகு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு டிசம்பரில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்துப் புதிய அறிவிப்பு வெளியாகும். அதே நேரத்தில் கரோனா அச்சம் காரணமாகப் பள்ளிக்கு வர விரும்பாத மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறும்'' என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x