Published : 19 Oct 2020 07:01 AM
Last Updated : 19 Oct 2020 07:01 AM

இணையவழியில் நடந்த பொறியியல் இறுதி பருவத் தேர்வில் கேமரா விதிமுறைகளை பின்பற்றாத மாணவர்களின் தேர்வு முடிவு நிறுத்திவைப்பு: மறு தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டம்

இணையவழியில் நடந்த பொறியியல் இறுதி பருவத் தேர்வில் கேமரா விதிமுறைகளை பின்பற்றாத மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உரிய விளக்கம் தராதவர்களுக்கு மறு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் பருவத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இளநிலை, முதுநிலை படிப்புகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இறுதி பருவத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக உயர்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பருவத் தேர்வு கடந்த மாதம் இணையவழியில் நடத்தப்பட்டது.

இந்நிலையில், இத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. அதில், ஏராளமான மாணவர்களுக்கு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

இணையவழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தேர்வுக்கு முன்பாக பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, தேர்வு நேரம் தொடங்கியது முதல் முடியும் வரை செல்போனின் முன்கேமரா அல்லது வெப்கேமரா வழியாக மாணவர்களின் முகம் தொடர்ந்து தெரியவேண்டும் என்றுவலியுறுத்தப்பட்டது. இதை பலமாணவர்கள் முறையாக கடைபிடிக்கவில்லை. இதனால், அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுஇருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவ்வாறு சந்தேகத்துக்குரிய மாணவர்களுக்கான தேர்வுமுடிவுகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அவர்களிடம் பல்கலைக்கழகம் சார்பாக கல்லூரி வழியே விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் தரும் விளக்கத்தின் அடிப்படையில், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். முறையான விளக்கம் கொடுக்காத மாணவர்களுக்கு மறுதேர்வு வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தேர்வு முடிவு வெளியாகாததால், வளாக நேர்காணல் மூலம்பணிக்கு தேர்வாகியுள்ள மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x