Last Updated : 17 Oct, 2020 03:47 PM

 

Published : 17 Oct 2020 03:47 PM
Last Updated : 17 Oct 2020 03:47 PM

நீட் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்றும் முதலிடத்தை இழந்த மாணவி; என்ன காரணம்?

நீட் தேர்வில் முழுமையாக 720 மதிப்பெண்களைப் பெற்றிருந்தும் அகான்ஷா சிங், வயது காரணமாக 2-ம் இடம் பெற்றார்.

மருத்துவப் படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியாகின. இதில் நாடு முழுவதும் 7.7 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் ஒடிசாவை சேர்ந்த மாணவர் சோயப் அப்தாப் மற்றும் டெல்லியைச் சேர்ந்த மாணவி அகான்ஷா சிங் ஆகியோர் 720-க்கு 720 மதிப்பெண் பெற்றிருந்தனர். நீட் தேர்வு வரலாற்றில் இதுவரை எந்த மாணவரும் முழு மதிப்பெண்களைப் பெற்றதில்லை.

முதல் முறையாக இருவர் 100% மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றதையடுத்து டை-பிரேக் கொள்கைகளின்படி முதலிடம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

நீட் டை-பிரேக் கொள்கைகளின்படி வயது, பாட ரீதியான மதிப்பெண்கள் மற்றும் தவறாக விடையளிக்கப்பட்ட பதில்களின் எண்ணிக்கை ஆகியவை கணக்கில் கொள்ளப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த முறை சோயப் அப்தாப் மற்றும் அகான்ஷா சிங் இருவருமே முழுமையான மதிப்பெண்களைப் பெற்றிருந்ததால் பாட ரீதியான மதிப்பெண்கள் மற்றும் தவறாக விடையளிக்கப்பட்ட பதில்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ள முடியவில்லை.

இதனால் இருவரின் வயதும் கணக்கில் எடுக்கப்பட்டது. அந்த வகையில் சோயப் அப்தாப் மூத்த மாணவர் என்பதால் அவருக்கு முதலிடம் வழங்கப்பட்டு, அகான்ஷாவுக்கு இரண்டாமிடம் வழங்கப்பட்டது.

இதேபோல, தும்மாலா ஸ்னிகிதா (தெலங்கானா), வினீத் சர்மா (ராஜஸ்தான்), அம்ரிஷா கைதன் (ஹரியாணா), குதி சைதன்யா சிந்து (ஆந்திரா) ஆகிய நான்கு பேரும் 720 மதிப்பெண்களுக்கு 715 மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். இருப்பினும், அவர்களுக்கு டை-பிரேக் கொள்கைப்படி முறையே மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்கள் அளிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x