Last Updated : 15 Oct, 2020 02:52 PM

 

Published : 15 Oct 2020 02:52 PM
Last Updated : 15 Oct 2020 02:52 PM

இமாச்சலில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் கோவிட் பரிசோதனை செய்யத் திட்டம்

பள்ளிகள் திறப்பை முன்னிட்டு இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குக் கோவிட் பரிசோதனை செய்யத் திட்டமிட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தேசத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.

இதற்கிடையே மத்திய அரசு பொருளாதாரத்தை முன்னிறுத்திப் பொதுமுடக்கத் தளர்வுகளை மாதந்தோறும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் அக்.15 முதல் பள்ளிகளைத் திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பான முடிவுகளை அந்தந்த மாநில அரசுகளே எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் 10 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் பள்ளிக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக காங்க்ரா மாவட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் கோவிட் பரிசோதனை செய்யத் திட்டமிட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் காங்க்ரா துணை ஆணையர் ராகேஷ் பிரஜாபதி கூறும்போது, ''பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் கோவிட் பரிசோதனை செய்யத் திட்டமிட்டு வருகிறோம்.

அதேபோல அனைத்து அரசு அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்குக் கரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் கோவிட் 19-க்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறோம்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x