Published : 13 Oct 2020 04:17 PM
Last Updated : 13 Oct 2020 04:17 PM

நீட் மறு தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு: என்டிஏ அறிவிப்பு

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கான மறு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக என்டிஏ அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் 2020-21 ஆம் கல்வி ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, கரோனா தொற்றுப் பரவலுக்கிடையில் செப்.13-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் உட்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இதில், 85 முதல் 90 சதவீதத்தினர் நீட் தேர்வில் பங்கேற்றதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். நாடு முழுவதும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) நீட் தேர்வை நடத்தியது.

எனினும் கரோனா தொற்று ஏற்பட்டதால் ஏற்கெனவே நடைபெற்ற தேர்வை எழுதாமல் தவறவிட்டவர்கள் மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று நேற்று (அக்.12) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து நாளை (அக்.14-ம் தேதி) மதியம் 2 மணி முதல் 5 மணி வரை, மீண்டும் நீட் மறு தேர்வு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைத் தேசியத் தேர்வுகள் முகமை செய்து வருகிறது. இந்நிலையில் மறு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக என்டிஏ அறிவித்துள்ளது.

மாணவர்கள் https://ntaneet.nic.in/ntaneet/AdmitCard/AdmitCard.html என்ற இணைய முகவரியைப் பயன்படுத்தி, தங்களுடைய ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.

இதற்கிடையே அக்.16-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x