Published : 12 Oct 2020 03:43 PM
Last Updated : 12 Oct 2020 03:43 PM

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: 2-ம் கட்ட விண்ணப்பப் பதிவு தொடங்கியது- முதல்முறை இடம் கிடைக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம்

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கையில் முதல் கட்டத்தில் நிரம்பாத 55,000 இடங்களுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று (அக்.12) தொடங்கியுள்ளது.

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர். அதன்படி 8,608 தனியார் பள்ளிகளில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 771 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கைக்கு 86,318 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் 60 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மீதமுள்ள 55,000 இடங்களை நிரப்புவதற்கான 2-ம் கட்ட சேர்க்கைப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து இன்று (அக்.12) முதல் rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம், பெற்றோர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம். நவ.7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வான மற்றும் நிராகரிக்கப்பட்ட மாணவர்களின் விவரம் நவ.11-ம் தேதி தெரிவிக்கப்படும். ஒரு பள்ளியில் விண்ணப்பங்கள் அதிக அளவில் வந்திருந்தால் நவ.12-ம் தேதி குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர். அவர்களை நவ.15-ம் தேதிக்குள் உரிய பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x