Published : 10 Oct 2020 01:33 PM
Last Updated : 10 Oct 2020 01:33 PM

பொறியியல் மாணவர் சேர்க்கையில் ஒதுக்கீட்டு ஆணையை உறுதிசெய்ய வேண்டும்: மாணவர் சேர்க்கை செயலாளர் 

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இணையத்தில் தொடங்கி, நடைபெற்று வரும் நிலையில் மாணவர்களுக்குத் தற்காலிகச் சேர்க்கை உத்தரவு வழங்கியவுடன், அதனை ஏற்கிறார்களா இல்லையா என்பதை உறுதிசெய்ய வேண்டும். எந்த உறுதிமொழியும் அளிக்காதபட்சத்தில் தற்காலிக ஒதுக்கீடு ரத்தாகிவிடும் ஆபத்து உள்ளது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1 லட்சத்து 63,154 இடங்கள் உள்ளன. இதற்கான சேர்க்கைக் கலந்தாய்வில் பங்கேற்க 1.12 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இதற்கிடையே மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இணைய வழியில் அக்.1-ம் தேதி தொடங்கியது. பொதுப்பிரிவுக் கலந்தாய்வு அக்.8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுப்பிரிவுக் கலந்தாய்வில் மாணவர்கள் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இந்நிலையில் கலந்தாய்வு சேர்க்கை உத்தரவு தொடர்பாகப் பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மாணவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப, கல்லூரிகளில் இருக்கும் காலியிடங்களைப் பொறுத்து இடங்கள் ஒதுக்கப்படும். தற்காலிகச் சேர்க்கை உத்தரவு கிடைத்தவுடன் மாணவர்கள் அதை உறுதிசெய்ய வேண்டும். அதாவது ‘முதலில் ஒதுக்கப்படும் கல்லூரியைத் தேர்வு செய்கிறேன். அல்லது அடுத்த தெரிவைத் தேர்ந்தெடுக்கிறேன்’ என்று மாணவர்கள் தெரிவிக்க வேண்டும். அப்படிச் செய்யாதபட்சத்தில் அந்த இடம் மாணவர்களுக்குக் கிடைக்காது.

இதற்காக, ஒவ்வொரு சுற்றுக் கலந்தாய்விலும் இரண்டு நாட்கள் வழங்கப்படும். முதல் சுற்றுக் கலந்தாய்வில் பங்குபெறும் மாணவர்களுக்கு 14, 15 ஆகிய தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கலந்தாய்வில் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்கள், காணொலி வடிவில் www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விளக்கங்களைப் பார்த்துக் கலந்தாய்வில் பங்கேற்பது மாணவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்'' என்று மாணவர் சேர்க்கை செயலாளர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x