Last Updated : 06 Oct, 2020 12:31 PM

 

Published : 06 Oct 2020 12:31 PM
Last Updated : 06 Oct 2020 12:31 PM

72 வயதில் முதுகலைத் தேர்வெழுதிய எம்எல்ஏ: ஊரடங்கின்போது படிப்பதில் நேரம் செலவிட்டார்

சண்டிகர்

ஹரியாணாவைச் சேர்ந்த 72 வயது எம்எல்ஏ ஈஸ்வர் சிங், அரசியல் அறிவியல் பாடத்தில் முதுகலைத் தேர்வை எழுதியுள்ளார். இது தொடர்பான படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஹரியாணாவின் ஜனாயக் ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் ஈஸ்வர் சிங். 72 வயதான இவர் குலா சீக்கா தொகுதியில், சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். கல்வியில் ஆர்வம் கொண்ட அவர், கரோனா ஊரடங்கின்போது அரசியல் அறிவியல் பாடத்தைப் படித்துள்ளார். அதைத் தொடர்ந்து குருஷேத்ரா பல்கலைக்கழகத்தில் தனித்தேர்வராகத் தேர்வுகளை அண்மையில் எழுதியுள்ளார்.

1970-களில் அரசியலுக்கு வரும் முன்னர் ஆசிரியராகச் சில காலம் பணியாற்றினார் ஈஸ்வர் சிங். 10-ம் வகுப்பு மட்டுமே முடித்திருந்த அவர், 1977-ல் முதல் முறையாகச் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஹரியாணா பள்ளிக் கல்வி வாரியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

எனினும் 10-ம் வகுப்பை மட்டுமே முடித்து, என்ன கல்வி சார் கொள்கைகளை உருவாக்கிவிட் முடியும் என்று நினைத்தவர், பதவியை ராஜினாமா செய்தார். மீண்டும் படிக்க ஆரம்பித்தார். 34 வயதில் 12-ம் வகுப்பை முடித்தவர், 37 வயதில் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து எம்.ஏ. வரலாறு, சட்டம் ஆகியவற்றையும் படித்தார். மாநிலங்களவை எம்.பி.யாகவும் உயர்ந்தார்.

இதற்கிடையே கரோனா காரணமாக ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அந்த நேரத்தை வீணாக்க விரும்பாதவர், முதுகலை அரசியல் அறிவியல் பாடத்தைப் படித்துள்ளார். அதைத் தொடர்ந்து தேர்வுகளையும் சிறப்பான முறையில் எழுதியுள்ளதாகக் கூறும் ஈஸ்வர் சிங், கல்வி தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கும் பயன்படுவதாகக் கூறுகிறார்.

ஈஸ்வர் சிங் தேர்வெழுதுவது தொடர்பான படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x