Last Updated : 01 Oct, 2020 05:33 PM

 

Published : 01 Oct 2020 05:33 PM
Last Updated : 01 Oct 2020 05:33 PM

பெற்றோரின் அனுமதிக் கடிதம் இல்லாமல் மாணவர்களை பள்ளிக்குள் அனுமதித்தால் நடவடிக்கை: புதுச்சேரி முதல்வர் எச்சரிக்கை

புதுச்சேரி

புதுச்சேரியில் அக். 5-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் தனியார் பள்ளிகளில் பெற்றோர்களின் அனுமதிக் கடிதம் இல்லாமல் மாணவர்களை அனுமதித்தால் பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.

புதுச்சேரியில் வரும் 5-ம் தேதி முதல் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வரலாம். அக்.5-ம் தேதி முதல் 10, 12-ம் வகுப்புப் படிப்போரும், 12-ம் தேதி முதல் 9, 11-ம் வகுப்புப் படிப்போரும் பள்ளிக்கு வர கல்வித்துறை அனுமதி தந்துள்ளது.

இதைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி பள்ளிகள் திறப்பு பற்றி இன்று பேசும்போது, "புதுச்சேரியில் கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி 5-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் வர பெற்றோர்களின் அனுமதிக் கடிதம் அவசியம். அவ்வாறு பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் மாணவர்களை அனுமதித்தால் அந்தத் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பிற்பகல் 1 மணி வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும்" என்று கூறினார்.

கட்டுப்பாட்டு அறை அமைப்பு

பள்ளிகள் திறப்பையொட்டி சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதுபற்றி ஆட்சியர் அருண் கூறுகையில், "கல்வித் துறைக்கெனத் தனிக் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் ஆகியோர் தொடர்புகொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். இதன் எண் 104.

கல்வித்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு தொடர்பான விதிமுறைகளையும் அரசு விரைவில் வெளியிட உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ள தகவலில், "கோரிமேட்டிலுள்ள காவல்துறை விருந்தினர் மாளிகை, அனைத்து வசதிகளுடன் கூடிய குழந்தைகளுக்கான கோவிட் பராமரிப்பு மையமாக மாற்றப்படும். இதற்காக பள்ளிகளுக்குத் தரப்பட வேண்டிய வழிமுறைகள் தயாரிப்பில் உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x