Last Updated : 25 Sep, 2020 08:40 PM

 

Published : 25 Sep 2020 08:40 PM
Last Updated : 25 Sep 2020 08:40 PM

9 மாதங்களில் இளங்கலை பாடத்திட்டத்தை முடிப்பது சாத்தியமில்லை: மேற்கு வங்க பல்கலைக்கழகங்கள் கவலை

9 மாதங்களில் இளங்கலை பாடத்திட்டத்தை முடிப்பது சாத்தியமில்லை என்று மேற்கு வங்க பல்கலைக்கழகங்கள் கவலை தெரிவித்துள்ளன.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக 6 மாதங்களாகக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே மத்திய, மாநில அரசுகள் படிப்படியாகத் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நவ.1 முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ள யுஜிசி, அதற்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் 9 மாதங்களில் இளங்கலை பாடத்திட்டத்தை முழுமையாக முடிப்பது சாத்தியமில்லை என்று மேற்கு வங்க பல்கலைக்கழகங்கள் கவலை தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ஜாதவ்பூர் பல்கலைக்கழக மூத்த அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ''வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடந்தாலும் 9 மாதங்களுக்குள் ஒட்டுமொத்தப் பாடத்திட்டத்தையும் முடிப்பது கடினம்.

இதில் வார விடுமுறைகள், பண்டிகை விடுப்புகளும் வரும். ஏற்கெனவே முந்தைய செமஸ்டர்களின் துணைத் தேர்வுகளையும், ஆய்வகத் தேர்வுகளையும் நடத்தும் பணியில் இருக்கிறோம். அக்டோபர் 31-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிப்பது ஒன்றும் கடினமில்லை. ஆனால் 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டத்தை முழுவதுமாக முடிக்க முடியுமா என்று தெரியவில்லை'' என்றார்.

கொல்கத்தா பல்கலைக்கழக அதிகாரி கூறும்போது,'' யுஜிசி விதிமுறைகளைப் பின்பற்றி, பாடத்திட்டத்தை எவ்வாறு முழுமையாக நடத்துவ்து என்பது குறித்து துணைவேந்தர் -உயர்மட்டக் குழு இணைந்து கலந்து ஆலோசிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத் துணைவேந்தர் சப்யாசாச்சி பாசு சவுத்ரி கூறுகையில், ''மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் 2021 ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும். இதனால் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தேர்தல் மையங்களாக மாற்றப்படும். இதனாலும் கற்றல் பாதிக்கப்படும். இது, பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களை நடத்தி முடிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x