Published : 24 Sep 2020 03:57 PM
Last Updated : 24 Sep 2020 03:57 PM

அக்.10-ம் தேதிக்குள் 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ பதில்

12-ம் வகுப்பு மறு தேர்வு முடிவுகள் அக்.10-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ பதிலளித்துள்ளது.

10 மற்றும் 12-ம் வகுப்பில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பில் 87,651 மாணவர்கள் மறுதேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கான மறுதேர்வுகள், 12-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22, 23, 24, 25, 26, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.

இதற்கிடையே அக்.31-ம் தேதிக்குள் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை முடித்துவிட வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. ஆனால், மறுதேர்வுகளை நடத்தி முடித்து, தேர்வு முடிவுகளை வெளியிடத் தாமதமாகும் என்பதால், மாணவர் சேர்க்கைக்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஎஸ்இ விரைவாக மறுதேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் இதற்கு இன்று (செப்.24) பதிலளித்த சிபிஎஸ்இ, அக்.10-ம் தேதிக்குள் 12-ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், யுஜிசியுடன் இணைந்து மாணவர் சேர்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம் என்றும் தெரிவித்தது.

இதனால் மாணவர்களின் கோரிக்கைக்குப் பதில் அளிக்கப்பட்டதாகக் கூறி, உச்ச நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x