Last Updated : 24 Sep, 2020 12:30 PM

 

Published : 24 Sep 2020 12:30 PM
Last Updated : 24 Sep 2020 12:30 PM

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செப்.26 முதல் மீண்டும் திறப்பு: பரிசோதனை முயற்சியாக ஹரியாணாவில் அனுமதி

ஹரியாணாவில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை செப்.26-ம் தேதி முதல் மீண்டும் திறக்க அம்மாநில அரசு அனுமதித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவியதன் காரணமாக ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்துத் தேர்வுகள் நடத்தப்படாமலேயே 10-ம் வகுப்பு மாணவர்களும், இறுதியாண்டு தவிர்த்த பிற ஆண்டு கல்லூரி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

நடப்புக் கல்வி ஆண்டுக்கான பாடங்கள் தற்போது ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செப்.21-ம் தேதி முதல், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிக ளைத் திறப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த வகுப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து 6 மாதங்களுக்குப் பிறகு கர்நாடகா, ஆந்திரா, அசாம், பஞ்சாப், நாகாலாந்து, ஹரியாணா மற்றும் மேகாலாயா ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் பகுதியளவில் திறக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில் பள்ளிக்கு வருகின்றனர்.

இந்நிலையில் ஹரியாணாவில், பரிசோதனை முயற்சியாக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை செப்.26-ம் தேதி முதல் மீண்டும் திறக்க அம்மாநில அரசு அனுமதித்துள்ளது.

இதுகுறித்து ஹரியாணா உயர் கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

''ஆசிரியர்களிடம் இருந்து சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள மாணவர்களுக்காக, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

பி.ஏ. முதலாண்டு மாணவர்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வரலாம். பி.காம். மற்றும் பி.எஸ்சி. முதலாண்டு மாணவர்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை கல்லூரிக்கு வர அனுமதிக்கப்படுகிறது.

அதேபோல பி.ஏ. இரண்டாம் ஆண்டு மாணவர்கள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும் பி.காம். மற்றும் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரையும் செல்லலாம்.

பி.ஏ. மூன்றாம் ஆண்டு மற்றும் முதுகலை முதலாண்டு மாணவர்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை கல்லூரிகளுக்குச் செல்லலாம். அதே சமயம் பி.காம் மற்றும் பி.எஸ்சி. இறுதி ஆண்டு மாணவர்கள் மற்றும் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை கல்வி நிறுவனங்களுக்கு வரலாம்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x