Last Updated : 23 Sep, 2020 12:39 PM

 

Published : 23 Sep 2020 12:39 PM
Last Updated : 23 Sep 2020 12:39 PM

புத்தகத்தைப் பார்த்துத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: புதுச்சேரியில் மாணவிகள் தர்ணா

புதுச்சேரியில் அனைத்துக் கல்லூரி மாணவர்களைப் போல் தங்களைப் புத்தகத்தைப் பார்த்துத் தேர்வு எழுத அனுமதிக்காததைக் கண்டித்து ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் தேர்வைப் புறக்கணித்து, தேர்வு மையம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கரோனா பாதிப்பு காரணமாக புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் இறுதியாண்டுத் தேர்வைப் புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் என்று புதுச்சேரி பல்கலை. நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி அனைத்துக் கல்லூரி மாணவர்களும் புத்தகத்தைப் பார்த்துத் தேர்வு எழுதி வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் பட்டயப் படிப்பு மாணவிகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வைப் புத்தகத்தைப் பார்த்து எழுதக் கூடாது எனக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் முழுமையாக பாடத்தைக் கூட நடத்தாமல் தேர்வு எழுதுவது கடினம் என்று தெரிவித்துள்ளனர். மற்ற மாணவர்களைப் போல் புத்தகத்தைப் பார்த்துத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் இன்றைய தேர்வைப் புறக்கணித்தனர். அத்துடன் தேர்வு எழுதும் வளாகம் முன்பு தர்ணாவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x