Published : 22 Sep 2020 07:25 PM
Last Updated : 22 Sep 2020 07:25 PM

தேசிய கல்விக் கொள்கை வேலைவாய்ப்பையும் தொழில்முனைவோரையும் உருவாக்கும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

தேசிய கல்விக் கொள்கை வேலைவாய்ப்பையும் தொழில்முனைவோர்களையும் உருவாக்கும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

ஐஐடி குவஹாட்டியின் 22-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் உயர் அதிகாரிகள் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றினர். பட்டமளிப்பு விழாவில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பி.எச்டி பட்டம் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் பொக்ரியால், ''கடந்த 30 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தற்போது புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதை இறுதிப்படுத்தும் முன்னர் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பிற தரப்பினரிடம் கருத்துக் கேட்டோம். இப்போது சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் இருந்து கல்விக் கொள்கைக்குப் பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

வரும் காலத்தில் உலகளாவிய தரத்துக்கு ஏற்ப இந்தியக் கல்வி அமைப்பு இணைந்து செயல்பட கல்விக் கொள்கை உதவும். ஐஐடி குவஹாட்டி பட்டமளிப்பு விழாவில் முன்பு பேசிய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், வேலைவாய்ப்பையும் தொழில்முனைவோர்களையும் கல்வி உருவாக்க வேண்டும் என்றார். இதில்தான் தேசிய கல்விக் கொள்கையும் கவனம் செலுத்துகிறது. கல்விக் கொள்கை நமது சமுதாயத்தில் வேலைவாய்ப்பையும் தொழில்முனைவோர்களையும் உருவாக்கும்'' என்று தெரிவித்தார்.

முன்னதாகப் பேசிய பிரதமர் மோடி, தேசிய கல்விக் கொள்கை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலக அளவில் முதன்மையான நாடாக இந்தியாவை உருவாக்கும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x