Published : 20 Sep 2020 06:56 AM
Last Updated : 20 Sep 2020 06:56 AM

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஏழை மாணவர்களுக்கு மொபைல், இன்டெர்நெட் பேக்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

கரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு லேப் டாப் அல்லது டேப்லட் அல்லது ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி ‘ஜஸ்டிஸ் ஃபார் ஆல்’ என்ற தன்னார்வ அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் மன்மோகன், சஞ்சீவ் நருளா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது தன்னார்வ அமைப்பு சார்பில் வழக்கறிஞர் ககேஷ் ஜா வாதாடினார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஏழை மாணவர்களுக்கு மொபைல் போன் மற்றும் இன்டெர்நெட் பேக் வழங்கப்பட வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் இவற்றை அரசு வழங்க வேண்டும். ஒருவேளை அரசு வழங்கத் தவறினால் தனியார் பள்ளிகளே இவற்றை மாணவர்களுக்கு கொடுத்துவிட்டு அதற்கான நியாயமான செலவை அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

கல்வித் துறை செயலாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள், தனியார் பள்ளிகளின் பிரதிநிதி என 3 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். மொபைல் போன், இன்டெர்நெட் பேக் வழங்கும் பணியை இக்குழு நெறிபடுத்த வேண்டும். தரமான மொபைல் போன் சாதனங்கள் மற்றும் இன்நெட் பேக்கை அடையாளம் காண்பதற்கான சீர்தர செயல்பாட்டு நடைமுறைகளையும் இக்குழு வகுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x