Published : 19 Sep 2020 07:52 PM
Last Updated : 19 Sep 2020 07:52 PM

ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்தக் குழுவை உருவாக்குக: மாநிலங்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை உருவாக்கி, ஒழுங்குபடுத்தக் குழுவை உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. அகமது படேல், ''ஆன்லைன் வகுப்புகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதுபற்றி ஆராயவும் வகுப்புகளை ஒழுங்குபடுத்தவும் குழுவொன்றை உருவாக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறோம்.

மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த விதிமுறைகளை, மத்திய அரசு தேசிய அளவில் ஒரே மாதிரியாக உருவாக்க வேண்டும். பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தை மாற்றுவதற்குப் பதிலாக, ஏழை மாணவர்களுக்கு டிஜிட்டல் உபகரணங்களை வழங்குவதற்குத் தேவையான நிதியை அதிகரிக்க வேண்டும்.

ஏழை மக்களின் வீடுகளில் மடிக்கணினியோ அல்லது கணிப்பொறியோ இருப்பதில்லை. ஒருவேளை அவர்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால், அது அனைத்துக் குடும்ப உறுப்பினர்களாலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே டிஜிட்டல் இடைவெளிக்கான கருவியாக டிஜிட்டல் இந்தியா மாறிவிடக் கூடாது.

2014-ல் நரேந்திர மோடி அரசு ஓர் உறுதி அளித்தது. 2.5 லட்ச பஞ்சாயத்துகளுக்கு 2017-ல் இணைய வசதி அளிக்கப்படும் என்றது. ஆனால் தற்போது வரை 23 ஆயிரம் பஞ்சாயத்துகளுக்கு மட்டுமே இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது'' என்றார் அகமது படேல் எம்.பி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x