Published : 19 Sep 2020 12:34 PM
Last Updated : 19 Sep 2020 12:34 PM

10, 12-ம் வகுப்பு மறுதேர்வு ரத்து செய்யப்படாது; 2.38 லட்சம் பேருக்கு செப்.22 முதல் தேர்வுகள்: சிபிஎஸ்இ அறிவிப்பு

10, 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ மறுதேர்வுகள் ரத்து செய்யப்படாது என்றும் செப்.22-ம் தேதி முதல் 2.38 லட்சம் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

10 மற்றும் 12-ம் வகுப்பில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 1,50,198 பேரும் 12-ம் வகுப்பில் 87,651 பேரும் இந்தப் பிரிவில் இருந்தனர். இவர்களுக்கான தேர்வுகள் செப்.22 முதல் நடத்தப்படும் என்று ஏற்கெனவே சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.

கரோனா பரவல் காரணமாக இத்தேர்வுகள் இந்த ஆண்டு மட்டும் ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், தேர்வுகள் ரத்து செய்யப்படாது என்றும், திட்டமிட்ட தேதியில் தேர்வுகள் தொடங்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

தேர்வறையில் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும். மாணவர்கள் சானிடைசரையும், உள்ளே இருப்பது தெளிவாகத் தெரியும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்துச் செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மறுதேர்வை 2.38 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

2020-ம் ஆண்டு பொதுத்தேர்வில் மாணவர்கள் 10-ம் வகுப்பில் 91.46 சதவீதத் தேர்ச்சியும் 12-ம் வகுப்பில் 88.78% தேர்ச்சியும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x