Published : 18 Sep 2020 05:15 PM
Last Updated : 18 Sep 2020 05:15 PM

கட்டாய முகக்கவசம், விரும்பினால் கையுறை: 10,11,12-ம் வகுப்பு துணைத்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

10,11,12-ம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையே 10,11,12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள், தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத் தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் கடந்த மாதம் அறிவித்தது.

இதன்படி 10-ம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கி, தொடர்ச்சியாக 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 11-ம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 7-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 12-ம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில், மாணவர்கள் தண்ணீர் பாட்டில், சானிடைசர் ஆகியவற்றை தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் முகக்கவசம் அணிந்து தேர்வு எழுத வேண்டும். விரும்பினால், கையுறை அணிந்து தேர்வு எழுதவும் அனுமதி அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், பணியாளர் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வறையில் அனைவரும் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதலாக முகக்கவசங்களை வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x