Published : 18 Sep 2020 12:41 PM
Last Updated : 18 Sep 2020 12:41 PM

பள்ளிப் பாடத்திட்டம் 40% குறைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம் அருகே நம்பியூரில் நலத்திட்டப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (செப்.18) தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''அரசால் அமைக்கப்பட்ட குழு தந்த அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.

நீட் நுழைவுத் தேர்வில் மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்துதான் 90 சதவீதக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதுபோல எத்தனை போட்டித் தேர்வுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் பாடத்திட்டத்தை உருவாக்குவோம்.

மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க, கல்வித் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 6 மணி நேரம் ஒதுக்கப்படும். கரோனா முடிவுக்கு வந்த பிறகு விளையாட்டுத் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும்.

அதேபோலச் சிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x