Published : 16 Sep 2020 04:58 PM
Last Updated : 16 Sep 2020 04:58 PM

பள்ளிகளில் கொசுப் பெருக்கத்தைத் தடுக்க வாரத்துக்கு ஒருமுறை சிறப்பு தினம்: டெல்லி அரசு உத்தரவு

மழைக் காலத்தில் கொசுப் பரவலைத் தடுக்கும் வகையில் வீடு, பள்ளிகளில் வாரத்துக்கு ஒருமுறை தூய்மைப் பணிகளை மேற்கொள்ள டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக உலர் நாள் (dry day) என்ற தினத்தை அனுசரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்துப் பள்ளி முதல்வர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்ககம் கடிதம் எழுதியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''குளிர்சாதனங்கள், பறவைக் கூடுகள், பூந்தொட்டிகள், தண்ணீர் சேமிப்பான்கள், தேங்கி நிற்கும் நீர் உள்ள பகுதி மற்றும் கொசு உற்பத்தி ஆக வாய்ப்புள்ள பகுதிகள் அனைத்தையும் முழுமையாகச் சுத்தப்படுத்தி உலர வைக்க வேண்டும். இதற்காக வாரத்தில் ஒருநாள் (கடைசி வேலை நாள்) பள்ளியில் உலர் தினத்தை அனுசரிக்க வேண்டும்.

இது டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா உள்ளிட்ட நோய்களில் இருந்து பள்ளி மாணவர்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். ஒவ்வோர் ஆண்டும் மழைக் காலத்தில் இந்த நோய்கள் பரவ அதிக வாய்ப்புண்டு. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பட்சத்தில் கடுமையான தொற்றுப் பரவலுக்கு வழிவகுக்கும்.

எந்த நோயையும் கட்டுப்படுத்த நோய்த் தடுப்பே சிறந்த வழி. இதனால் கொசு இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பள்ளி மாணவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

கரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், வீடுகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளை மாணவர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.

முழுக்கை கொண்ட ஆடைகளை அணிவதுடன் கொசுத் தடுப்பான்கள், கதவு மற்றும் ஜன்னல்களில் வலை, தண்ணீர்த் தொட்டிகளை மூடி வைத்தல், தண்ணீர் தேங்கும் பகுதிகளைச் சுத்தப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் கண்காணிக்க பள்ளி அளவில் கண்காணிப்பு அதிகாரி ஒருவரை அனைத்துப் பள்ளிகளிலும் நியமனம் செய்ய வேண்டும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x