Published : 15 Sep 2020 05:35 PM
Last Updated : 15 Sep 2020 05:35 PM
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 2014-ம் ஆண்டில் இருந்து 4 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி மாநிலங்களவையில் எழுத்துபூர்வமான பதிலில் தெரிவிக்கும்போது, ''2014-15 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 4,00,06,080 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் ரூ.11,690.81 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
சிறுபான்மையின நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையின்படி, ''அமைச்சகத்துக்காக 2015-16 முதல் 2019-20 ஆம் ஆண்டுகளில் ரூ.21,160.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 90.75 சதவீத நிதி செலவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு வகையான உதவித்தொகைத் திட்டங்கள் மூலம் 3,06,19,546 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.9,223.68 கோடி செலவிடப்பட்டுள்ளது. இவை 2015-16 முதல் 2019-20 வரையான புள்ளிவிவரங்கள் ஆகும். இதில் 54 சதவீத உதவித்தொகை சிறுபான்மையின மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT