Published : 14 Sep 2020 05:34 PM
Last Updated : 14 Sep 2020 05:34 PM

ஊரடங்கின்போது 9.5 கோடி மாணவர்களுக்கு உணவுப்பொருட்கள்: மத்திய அரசு தகவல்

ஊரடங்கின்போது சுமார் 9.5 கோடி குழந்தைகளுக்கு உணவுப் பாதுகாப்பு உதவித்தொகையின் அடிப்படையில், உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க இயலாத நிலையில், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட சத்துணவுக்கான பொருட்களை மாணவர்களுக்கு நேரடியாக வழங்க முடிவெடுக்கப்பட்டது.

இதனால் மாணவர்களுக்கு உணவு தானியம், பருப்பு உள்ளிட்டவற்றை வழங்க மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்தன. அதன் அடிப்படையில் மாநில அரசுகள் நிவாரணத் தொகை, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்கின. தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தலா 3,100 கிராம் அரிசி, 1,200 கிராம் பருப்பு, 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தலா 4,650 கிராம் அரிசி, 1,250 கிராம் பருப்பு என ஒவ்வொரு மாதத்துக்கும் உலர் உணவுப் பொருட்கள் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

இதற்கிடையே நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் பொக்ரியால், ''ஊரடங்கின்போது சுமார் 9.5 கோடி குழந்தைகளுக்கு உணவுப் பாதுகாப்பு உதவித்தொகையின் அடிப்படையில், உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கோவிட்-19 காரணமாக நிலவும் சூழலால், சூடான சமைத்த சத்துணவை மாணவர்களுக்கு வழங்குவது சாத்தியமில்லை. இதனால் மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் உணவுப் பாதுகாப்பு உதவித்தொகை அடிப்படையில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை தகுதியுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்கியுள்ளன’’ என்று தெரிவித்துள்ளார்.

இதில் உத்தரப் பிரதேச அரசு 1.13 கோடி மாணவர்களுக்கும், மேற்கு வங்கம் மற்றும் பிஹார் அரசுகள் சார்பில் முறையே 1.12 கோடி மற்றும் 1.08 கோடி மாணவர்களுக்கும் உணவு, தானியங்கள், எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் சுமார் 80 லட்ச மாணவர்களுக்கும், மத்தியப் பிரதேசத்தில் சுமார் 60 லட்ச மாணவர்களுக்கும் தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x