Published : 14 Sep 2020 04:41 PM
Last Updated : 14 Sep 2020 04:41 PM

சினிமா, பீடி, சுரங்கத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு; விண்ணப்பங்கள் வரவேற்பு

பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மத்திய நல ஆணையர் பழ.ராஜேந்திரன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''இந்திய அரசின், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்முறைப் படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2020-2021 ஆம் ஆண்டில், ரூபாய் 250/- முதல் ரூபாய் 15,000/- வரை, கல்வித் உதவித்தொகை பெறுவதற்காக, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1) http://scholarships.gov.in என்கிற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்.

2) ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கெனத் தனியாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின், மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்பமுறையில், தங்களுடைய சேமிப்புக் கணக்கு, தேசிய மின்னணுப் பரிவர்த்தனை வசதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

3) விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை, தங்களுடைய சேமிப்பு வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்குத் தகுதியுடையவராகக் கருதப்படுவர்.

4) இத்திட்டத்தின் கீழ், கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணைப் பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.

5) கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், http://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில், முதலில் பதிவு செய்தல் வேண்டும். பின்பு மேற்குறிப்பிட்ட வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கி, தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஒருவேளை கல்வி நிறுவனங்கள், மின்னணு விண்ணப்பங்களை தங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சரிபார்க்காமல், அடுத்தகட்ட சரிபார்க்கும் முறைக்குச் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அந்த விண்ணப்பங்களை மேற்கொண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்குச் செயல்படுத்த இயலாது.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31/10/2020.

மேற்கொண்டு விளக்கங்கள் மற்றும் உதவி பெறுவதற்கு, சென்னை, கிண்டி, திரு.வி.க.தொழில் பூங்கா, சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகத்தில் உள்ள நல ஆணையர் அலுவலகத்தை அணுகலாம்.

தொலைபேசி எண்: 044-29530169

மின்னஞ்சல் - scholarship201718tvl@gmail.com.''

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x