Last Updated : 14 Sep, 2020 12:01 PM

 

Published : 14 Sep 2020 12:01 PM
Last Updated : 14 Sep 2020 12:01 PM

மதிய உணவுத் திட்டத்தின்கீழ் புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரிசி, ஊக்கத்தொகை 

புதுச்சேரி

மதிய உணவுத் திட்டத்தின்கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிகள் மூலம் 4 கிலோ அரிசி மற்றும் ரொக்கத் தொகை விநியோகிக்கப்பட உள்ளது.

கரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு அளிக்கும் மதிய உணவைத் தர முடியாத சூழல் உள்ளது.

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரிசியும், உணவுப் பாதுகாப்பு ஊக்கத்தொகை நாளை முதல் அவரவர் படிக்கும் பள்ளிகளில் தரப்பட உள்ளது.

இதுபற்றிக் கல்வித்துறை பிறப்பித்த உத்தரவில், ''தினமும் காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 முதல் மாலை 4 மணி வரையிலும் அரிசி, சமைப்பதற்கான செலவின ரொக்கத்தைப் பெறலாம். நாளை (15-ம் தேதி) 1, 2-ம் வகுப்புகளுக்கும், 16-ம் தேதி 3, 4-ம் வகுப்புகளுக்கும், 17-ம் தேதி 5, 6-ம் வகுப்புகளுக்கும், 18-ம் தேதி 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் தரப்பட உள்ளது.

அரசுப் பள்ளிகளில் முந்தைய கல்வியாண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படித்த குழந்தைகளின் பெற்றோர் அந்தந்தப் பள்ளிகளுக்குச் சென்று அரிசி, ரொக்கத்தைப் பெறலாம். இதைப் பெற ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். 1 முதல் 5-ம் வகுப்பு வரை படித்தோருக்கு 4 கிலோ அரிசி, ரூ.290 ரொக்கமும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை படித்தோருக்கு 4 கிலோ அரிசி, ரூ.390 ரொக்கமும் முதல் தவணையாகத் தரப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x