Published : 14 Sep 2020 08:01 AM
Last Updated : 14 Sep 2020 08:01 AM

பயிற்சி மையங்களில் படிக்கும் நீட் மாணவர்களுக்கு கவுன்சலிங் தர திட்டம்: முதல்வருடன் ஆலோசித்து முடிவு என அமைச்சர் தங்கமணி தகவல்

நீட் பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கவுன்சலிங் தருவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும், என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

திருச்செங்கோட்டில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் மோதிலால் பெற்றோரை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாணவர்கள் மருத்துவ படிப்பு மட்டும் தான் வாழ்க்கை என கருதி தவறான முடிவுக்கு வரக்கூடாது. எத்தனையோ படிப்புகள் உள்ளது. அதனை படித்தும் முன்னுக்கு வரலாம் என மாணவர்களுக்கு முதல்வர் பலமுறை அறிவுறுத்தி உள்ளார்.

நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கை. அதையே தான் நாங்களும் பின்பற்றுகிறோம். நீட் தேர்வு கூடாது என்பது தான் எங்கள் கொள்கை. அதற்காக போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். நீட் பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கவுன்சலிங் தருவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மாணவர் மோதிலால் குடும்பத்துக்கு நிதி உதவி செய்வது குறித்து முதல்வர் தான் தெரிவிப்பார் என்றார்.

முன்னதாக மாணவர் மோதிலால் உருவப்படத்துக்கு அமைச்சர் தங்கமணி மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்தி கணேசன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் மாணவர் மோதிலால் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x