Published : 12 Sep 2020 11:55 AM
Last Updated : 12 Sep 2020 11:55 AM

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியாகின; 24 மாணவர்கள் 100% மதிப்பெண்- தெலங்கானா முதலிடம்

பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவில் வெளியாகின. இதில் 24 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபோதும் திட்டமிட்டபடி ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, 6-ம் தேதி முடிவடைந்தன.

தேர்வுக்கு 8.58 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர். இதில் 6.35 லட்சம் மாணவர் தேர்வில் கலந்துகொண்டனர். அதாவது 2.2 லட்சம் மாணவர்கள் (சுமார் 25% பேர்) தேர்வெழுதவில்லை.

இந்நிலையில், ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவில் வெளியாகின. இதில் 24 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் 8 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். டெல்லியில் 5 பேர், ராஜஸ்தானில் 4 மாணவர்கள், ஆந்திராவில் மூவர், ஹரியாணாவில் 2 பேர், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு மாணவர் 100% மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

தேர்வர்கள் jeemain.nta.nic.in என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து தங்களின் விண்ணப்ப எண், கடவுச்சொல் மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை அறிய முடியும்.

ஜேஇஇ மெயின் தாள் 1 மற்றும் தாள் 2-ல் முதல் 2.45 லட்சம் இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வை எழுதத் தகுதி பெற்றவர்கள் ஆவர், இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடிக்களில் மாணவர்கள் படிக்க முடியும். ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x