Published : 12 Sep 2020 06:54 AM
Last Updated : 12 Sep 2020 06:54 AM

இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக 3,842 மையங்களில் நாளை ‘நீட்’ தேர்வு: நாடு முழுவதும் 15.97 லட்சம் பேர் எழுதுகின்றனர்

இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு தமிழகத்தில் உள்ள 14 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் 3,842 மையங்களில் நாளை நடக்கிறது.

இத் தேர்வை 15.97 லட்சம்மாணவ, மாணவிகள் எழுதுகின் றனர். கரோனா தொற்று காரணமாக அனைத்து தேர்வு மையங்களிலும் முழுமையான பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு 2020-21-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’தேர்வு நாளை (செப்.13) நடைபெறுகிறது.

இத்தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. www.nta.ac.in, www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வுக்கான ஹால்டிக்கெட் 2 வாரங்களுக்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்டது. இதை மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்துள் ளனர்.

தமிழகத்தில் 238 மையங்கள்

நாடு முழுவதும் 154 நகரங்களில் 3,842 மையங்களில் தேர்வு நடக்க உள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர்,கடலூர், நாமக்கல், சேலம், கோவை, கரூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, நாகர் கோவில் ஆகிய 14 நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸாமி, வங்கம், உருது ஆகிய11 மொழிகளில் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் உட்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 8 ஆயிரம் பேர் ‘நீட்’ தேர்வு எழுதுகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

கரோனா தொற்று குறித்த அச்சம் இருப்பதால், மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, மிகுந்த கவனத்துடன் ‘நீட்’ தேர்வை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களும் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப் பட்டுள்ளன.

தேர்வு மையங்களுக்கு வரும்மாணவ, மாணவிகளை தனித்தனி வரிசையில் போதிய இடைவெளியில் நிற்கவைத்து சோதனைசெய்ய வேண்டும். உடலை தொடக் கூடாது. சற்று தொலைவில் இருந்தபடியே மெட்டல் டிடெக்டர் கருவியால் சோதனை நடத்த வேண்டும். காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்டறிய வெப்பமானி மூலம் சோதனை செய்ய வேண்டும்.

பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்

தேர்வு அறையில் போதிய இடைவெளி அவசியம். ஒரு அறையில் 20 பேர் மட்டுமே அனுமதி. உடல் வெப்பநிலை அதிகம் உள்ளமாணவர்களை தனி அறையில் தேர்வு எழுதவைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் தேர்வு மைய பொறுப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளன.

நாளை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடக்கிறது. பகல் 1 மணி வரை தேர்வுமையத்துக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கூட்டத்தை தவிர்க்க, காலை 11 முதல் 1 மணிக்குள் எத்தனை மணிக்கு தேர்வு மையத்துக்கு வரவேண்டும் எனஹால்டிக்கெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள சுயவிவர படிவத்தை மாணவர்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஹால்டிக்கெட், அடையாள அட்டையுடன், முகக் கவசம், கையுறை,தண்ணீர் பாட்டில், சானிடைசர் ஆகியவற்றை மாணவ, மாணவிகள் எடுத்துவர அனுமதிக்கப்பட்டுள்ளது. அரைக்கை சட்டை அணிய வேண்டும். ஷூ, சாக்ஸ் அணியக் கூடாது. காலணி ஹைஹீல்ஸ்உள்ளதாக இருக்கக் கூடாதுஎன்பன உள்ளிட்ட வழக்கமானகட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், நாமக்கல், சேலம், கோவை, கரூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, நெல்லை, நாகர்கோவில் ஆகிய 14 நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x