Published : 10 Sep 2020 05:47 PM
Last Updated : 10 Sep 2020 05:47 PM

ஜேஇஇ தேர்வை 2.2 லட்சம் மாணவர்கள் எழுதவில்லை: மத்திய கல்வித்துறை அமைச்சர் தகவல்

பொறியியல் நுழைவுத்தேர்வான ஜேஇஇ தேர்வை 2.2 லட்சம் மாணவர்கள் எழுதவில்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிஹார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதனால் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபோதும் திட்டமிட்டபடி ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, 6-ம் தேதி முடிவடைந்தன. முதல் நாளில் சுமார் 50 சதவீத மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை என்று செய்திகள் வெளியாகின.

இதற்கிடையே சுமார் 18 லட்சம் மாணவர்கள் ஹால் டிக்கெட்டைத் தரவிறக்கம் செய்ததாகவும் அதில் 8 லட்சம் பேர் மட்டுமே தேர்வெழுதியதாகவும் சமூக ஊடகங்களில் வைரலானது. இதுகுறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், ''செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜேஇஇ தேர்வுக்கு 8.58 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர். இதில் 6.35 லட்சம் மாணவர் தேர்வில் கலந்துகொண்டனர்.

அதாவது 2.2 லட்சம் மாணவர்கள் (சுமார் 25% பேர்) தேர்வெழுதவில்லை. தேர்வெழுத வந்த மாணவர்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் மத்திய, மாநில அரசுகள் சாத்தியப்படுத்தின. இதற்காக அனைத்து மாநில அரசுகளுக்கும் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது கூட்டாட்சித் தத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு, கடந்த ஜனவரி மாதம் ஜேஇஇ தேர்வு நடந்தது. செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் கலந்துகொள்ளாதவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்வில் சிறப்பாகப் பங்களிப்பு செய்யலாம் என்று நினைத்திருக்கலாம். இதனால் இந்த முறை தேர்வெழுத வேண்டாம் என்று விட்டுவிட்டனர்'' என்று அமைச்சர் பொக்ரியால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x