Published : 09 Sep 2020 01:58 PM
Last Updated : 09 Sep 2020 01:58 PM

தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாகத் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்குக் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இணைய வகுப்புகளால் உடல், மனநலம் பாதிக்கப்படும் என்று புகார் எழுந்தது.

இந்நிலையில் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ''மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், காலாண்டு, அரையாண்டு விடுமுறைகளைப் போல, விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஒப்புதலோடு செப்டம்பர் 21-ம் தேதி முதல் 5 நாட்கள் 25-ம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படக் கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த 5 நாட்களும் மாணவர்கள் மன அழுத்தமில்லாமல், மகிழ்ச்சியுடன் இருக்கலாம். தடை செய்யப்பட்ட 5 நாட்களும் ஆன்லைன் வகுப்புகள் நடக்கிறதா என்று கண்காணிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆன்லைன் வகுப்புகள் குழந்தைகளுக்குக் கட்டாயமில்லை. ஆன்லைன் வகுப்புகளில் படிக்காத மாணவர்கள் பள்ளிகள் திறக்கப்படும்போது ஆன்லைனில் படிக்கும் மாணவர்களுக்குரிய உரிமைகள் உண்டு. அவர்களுக்கும் உரிய பாடங்கள் வழங்கப்படவேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x