Published : 08 Sep 2020 05:26 PM
Last Updated : 08 Sep 2020 05:26 PM

சுனாமியை விட இந்த பொழுதுகள் ரணமானவை: நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிசெய்யும் தனியார் பள்ளி ஆசிரியை!

கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மீள் எழுச்சி இன்னும்கூட எட்டாக் கனியாகவே இருக்கிறது. அந்த வரிசையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் நூறு நாள் வேலைத் திட்டத்தில் சேர்ந்து பணி செய்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனாவுக்கு தங்களது வாழ்வாதாரத்தை இழந்தவர்களில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் முக்கியமானவர்கள். கரோனா பொதுமுடக்க காலத்தில் பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கவில்லை. கரோனாவால் வேலை இழப்பு, ஊதிய வெட்டு ஆகியவற்றை எதிர்கொண்டிருக்கும் பெற்றோர்களில் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்தவில்லை. தனியார் பணி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

இப்படியான சூழலில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த டெல்சி செலின்ரோஸ் என்ற தனியார் பள்ளி ஆசிரியை இப்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் (நூறு நாள் வேலைத் திட்டம்) பணி செய்யுமளவுக்கு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்.

இது குறித்து 'இந்து தமிழ்' இணையத்திடம் பேசிய டெல்சி செலின்ரோஸ், “குளச்சல் பகுதிதான் எனது சொந்த ஊர். சுனாமியால் கடுமையாகச் சேதம் அடைந்த பகுதி இது. என் வீடும் சேதம் அடைந்தது. உடமைகளும் சேதமான நிலையில் கடற்கரையில் இருந்து இடம்பெயர்ந்து, முக்கடல் அணை அருகில் உள்ள காரியாங்கோணம் பகுதியில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன். நான் அடிப்படையில் எம்.ஏ. பட்டதாரி. தொடர்ந்து ஆசிரியர் பணியின் மீதான ஆர்வத்தால் பி.எட்., படித்தேன். கடந்த 24 வருடங்களாக தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிசெய்து வருகிறேன்.

ஊதியம் குறைவுதான் என்றாலும் மனதுக்கு நிம்மதியை கொடுக்கும் பணி இது. கரோனா வந்த முதல் மாதத்தில் முழுச் சம்பளமும் கொடுத்தார்கள். இரண்டாவது மாதத்தில் பாதிச் சம்பளம் ஆனது. மூன்றாவது மாதத்திலிருந்து சம்பளம் வழங்குவது நின்று போனது. இந்தச் சூழலிலும் என் குடும்பப் பொருளாதாரத்திற்கு நம்மால் கை கொடுக்க முடியவில்லையே என்ற கவலை என்னை அழுத்தியது.

உடனே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பதிவுசெய்து வேலைக்குச் சேர்ந்தேன். நான் இப்படியான ஒரு வேலைக்கு வருவேன் எனக் கனவிலும் நினைத்துப் பார்த்தது இல்லை. சுனாமியை விட இந்தப் பொழுதுகள் ரணமானவை. தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை குறித்தும் அரசு கவனம் செலுத்தவேண்டும். பேனா பிடித்த கையால் இன்று மண்வெட்டி பிடிக்கிறேன்.

இயல்பு நிலை திரும்பிப் பள்ளிக்கூடத்தில் பாடம் எடுக்கும்போது கரோனா காலத்தின் நினைவுகள் எல்லாம் வந்துபோகும். அதையெல்லாம் பார்த்தால் முடியாதல்லவா... இப்போது உயிர் வாழவேண்டுமே. அதனால்தான் எதைப்பற்றியும் யோசிக்காமல் மண்வெட்டி பிடிக்க வந்துவிட்டேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x