Published : 07 Sep 2020 07:49 AM
Last Updated : 07 Sep 2020 07:49 AM

அரசு கலை. அறிவியல் கல்லூரிகளில் முதல்கட்ட சேர்க்கையில் 60% இடங்களே நிரம்பின: தாமதத்தால் மாணவர்கள், பெற்றோர் அச்சம்

சென்னை

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதல்கட்ட மாணவர் சேர்க்கையில் 60 சதவீத இடங்களே நிரப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 128 வகையான இளநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு இணைய வழியில் 3.12 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அதில் 2.25 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து, கல்லூரி அளவிலான தரவரிசை வெளியிடப்பட்டு முதல்கட்ட மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி கடந்த 4-ம் தேதி வரை நடந்தது. இதில், தரவரிசையில் முன்னிலையில் இருந்த பல மாணவர்களுக்கும் கல்லூரிகளில் இருந்து அழைப்பு வரவில்லை.

இந்நிலையில், முதல்கட்ட மாணவர் சேர்க்கையில் மொத்தம் 53 ஆயிரம் இடங்களே (60 சதவீதம்) நிரப்பப்பட்டுள்ளன. இதில் பல கல்லூரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெறும் 40 சதவீதத்துக்கும் குறைவாகவே நிரப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசு கல்லூரிகளில் இருந்து அழைப்பு வருவது தாமதமானால், மாணவர்கள் தனியார் கல்லூரி நோக்கி செல்லும் நிலை ஏற்படும் என்பதால், அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து உயர்கல்வித் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அரசு கல்லூரி முதல்வர்கள் சிலர் கூறியதாவது:

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் திருநெல்வேலி, வேலூர், தஞ்சாவூர், தருமபுரி போன்ற மண்டலங்களில் உள்ள பல கல்லூரிகளில் 40 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கையே நடந்துள்ளது. புதிய கல்லூரிகள், அடிப்படைஇணைய வசதி இல்லாத கல்லூரிகளில் மாணவர்களின் விவரங்களை பதிவிறக்கம் செய்து தரவரிசை பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. மாணவர் சேர்க்கை குறைய இதுவே காரணம். அதேநேரம், சென்னை, கோவை, மதுரை மண்டலங்களில் உள்ள பல அரசு கல்லூரிகளில் 80 சதவீத மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.

அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை விரைந்துநடத்துமாறு முதல்வர்களை கல்லூரிக் கல்வி இயக்குநரகம், உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளன. அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனவே, மாணவர்கள், பெற்றோர் அச்சப்பட வேண்டாம். செப்டம்பர் 7 (இன்று) முதல் போக்குவரத்தும் சீராகிவிடும் என்பதால், மாணவர் சேர்க்கை விரைந்து நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x