Last Updated : 05 Sep, 2020 12:11 PM

 

Published : 05 Sep 2020 12:11 PM
Last Updated : 05 Sep 2020 12:11 PM

அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சரிவு: சுமார் 25 சதவீத இடங்களே நிரம்பியதாக தகவல்

தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் நடப்பாண்டு சுமார் 25 சதவீத இடங்களே நிரம்பியதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் மாநிலம் முழுவதும்109 அரசு கலைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் முதலாமாண்டில் சுமார் 90 ஆயிரம் இடங்கள்உள்ளன. கரோனாவைரஸ் பரவல்காரணமாக கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 2020-2021-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைஇணையதளம் வழியாக நடைபெற்று வருகிறது. இதில் 3.12 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

பின்னர், கல்லூரி வாரியாகதரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு,கடந்த ஆக. 28-ம் தேதி தொடங்கிய முதல்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்றுடன் (செப்.4) நிறைவடைந்தது. இதில் சுமார் 25 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்ககோவை மாவட்டச் செயலர் எம்.தினேஷ்ராஜா கூறியதாவது:

ஏழை, நடுத்தர மாணவர்கள் மற்றும் பின்தங்கிய கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள்பட்டப் படிப்புக்காக அரசுக் கல்லூரிகளையே நம்பியுள்ளனர். வழக்கமாக, அரசுக் கல்லூரிகளில் சேர மாணவர்களிடையே போட்டி இருக்கும்.ஆனால், நடப்பாண்டு நடைபெற்றஇணையவழி கலந்தாய்வு மூலம் சுமார் 25 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

மதிப்பெண் அடிப்படையில் பாடப் பிரிவுகளில் இடஒதுக்கீடு அளிக்கும்போது, விரும்பிய பாடம் கிடைக்கா விட்டால், வேறு பாடத்துக்கு மாறுவதற்கு இணையவழிக் கலந்தாய்வில் வாய்ப்பில்லை என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற கலந்தாய்வில் இந்த வாய்ப்பு இருந்தது.

எனவே, அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் பெறுதல் மற்றும் கலந்தாய்வு நடத்துவதற்கு மேலும் காலஅவகாசம் வழங்க வேண்டும். இணையவழி கலந்தாய்வு முறையை ரத்து செய்து, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த நேரடி கலந்தாய்வு முறையைத் தொடர வேண்டும். அனைத்து அரசு கலைக் கல்லூரிகளிலும் காலியாக உள்ள இடங்கள் மற்றும் நிரப்பப்படும் இடங்களின் விவரத்தை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கோவை மண்டலத் தலைவர் பி.திருநாவுக்கரசு கூறும்போது, ‘‘அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தாமதமாக நடைபெறுகிறது. இதனால், மாணவர்கள் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். சில அரசு உதவிபெறும் கல்லூரிகளும் இதே நிலையில்தான் உள்ளன.

தனியார் கல்லூரிகளில் தங்களிடம் உள்ள பாடப் பிரிவுகள் மற்றும் வசதிகளை தெரிவித்துவிட்டன. அரசுக் கல்லூரிகளில் விண்ணப்பித்த மாணவர்களில், விடுதி வசதியை எதிர்பார்த்து விண்ணப்பித்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களால் அந்த தகவல்களைப் பெற முடியாமல் போனதால், கலந்தாய்வில் பங்கேற்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

இணையவழி கலந்தாய்வுக்குப்பதிலாக நேரடி கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தியிருந்தால், வழக்கம்போல 80 சதவீதத்துக்கும் மேல் மாணவர்கள் சேர்ந்திருப்பார்கள். தற்போது சுமார் 25 சதவீத இடங்களே நிரம்பியுள்ளன. அரசுக் கல்லூரிகளையே நம்பியுள்ள மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரும் வகையில், விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும். மேலும், முன்புபோல நேரடி கலந்தாய்வு முறையையே பின்பற்ற வேண்டும்’’ என்றார்.

பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் கூறும்போது, ‘‘பல அரசுக் கல்லூரிகளில் இரு சுழற்சிகளாக வகுப்புகள்நடத்தப்படுகின்றன. இதனால் மாணவர்கள் பகுதி நேரமாக வேலைக்குச் சென்று, தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர். இணையவழி கலந்தாய்வில் சுழற்சிக்கான மாணவர் சேர்க்கைக்கு இடமில்லாமல் இருப்பது, அரசுக் கல்லூரிகளில் இம்முறை ரத்து செய்யப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. இரு சுழற்சிமுறை இருந்தால் மாணவர்கள் அதிக அளவில் படிக்க முடியும். எனவே, இப்பிரச்சினையில் உயர்கல்வித் துறை தலையிட்டு, உரிய தீர்வுகாண வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x