Published : 02 Sep 2020 09:15 PM
Last Updated : 02 Sep 2020 09:15 PM

சென்னையில் தனியார் பள்ளிகள் முழுக் கட்டணம் கேட்டால் புகார் கொடுக்கலாம்: இ-மெயில் முகவரி வெளியீடு

சென்னை

சென்னையில் தனியார் பள்ளிகள் முழுக் கட்டணங்களைச் செலுத்துமாறு கேட்டால், புகார் கொடுக்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். இதற்கான இ-மெயில் முகவரி வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதற்கிடையே பள்ளிகள் திறக்காத போதும் சில பள்ளிகள் உயர் நீதிமன்றம் நிர்ணயித்ததைவிட அதிகக் கட்டண வசூலில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பான வழக்கில் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் நடப்புக் கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணத்தில் 40 சதவீத்தை வசூல் செய்து கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் முழுக் கட்டணத்தையும் சில தனியார் பள்ளிகள் கேட்பதாகப் பெற்றோர்கள் கூறினர்.

இதனால், 40 சதவீதத்துக்கும் அதிகமாகக் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 40 சதவீதத்துக்கும் மேல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்துப் பெற்றோர் புகார் அளிக்கும் வகையில் பிரத்யேக இ-மெயில் முகவரியை உருவாக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் முழுக் கட்டணங்களைக் கட்டுமாறு பெற்றோரைக் கேட்டால் feescomplaintcell@gmail.com என்ற இ-மெயில் மூலமாகப் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x