Published : 02 Sep 2020 07:02 PM
Last Updated : 02 Sep 2020 07:02 PM

40 சதவீதத்துக்கு மேல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

சென்னை

40 சதவீதத்துக்கும் அதிகமாகக் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதற்கிடையே பள்ளிகள் திறக்காதபோதும் சில பள்ளிகள், உயர் நீதிமன்றம் நிர்ணயித்ததைவிட அதிகக் கட்டண வசூலில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பாகப் பெற்றோர்கள் புகார் அளிக்கலாம் என்று அண்மையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 40 சதவீதத்துக்கும் அதிகமாகக் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 40 சதவீதத்துக்கும் மேல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்துப் பெற்றோர் புகார் அளிக்கும் வகையில் பிரத்யேக இ-மெயில் முகவரியை உருவாக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரிவான அறிக்கை செப்.3-ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் நடப்புக் கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணத்தில் 40 சதவீத்தை வசூல் செய்து கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x