Published : 02 Sep 2020 01:21 PM
Last Updated : 02 Sep 2020 01:21 PM

ஜேஇஇ, நீட், என்டிஏ தேர்வர்களுக்கு செப்.15 வரை பிஹாரில் 20 சிறப்பு ரயில்கள்: பியூஷ் கோயல் அறிவிப்பு


பிஹார் மாநிலத்தில் ஜேஇஇ, நீட், என்டிஏ தேர்வர்களுக்காக செப்டம்பர் 15-ம் தேதி வரை 20 சிறப்பு ரயில்கள் விடப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நாடு முழுவதும் அமலில் உள்ளது. இதற்கிடையே ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவன இளநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு - ஜேஇஇ) நேற்று தொடங்கியுள்ளது. செப்டம்பர் 6-ம் தேதி வரை ஜேஇஇ மெயின் தேர்வுகள் நடைபெறுகின்றன.

அதேபோல மருத்துவ நுழைவுத் தேர்வான நீட், செப்.13-ம் தேதி நடைபெற உள்ளது. தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வும் நாடு முழுவதும் செப்டம்பர் 6-ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கிடையில் கரோனா தொற்று அச்சம், குறைவான போக்குவரத்து, தங்கும் வசதிகளால் தேர்வர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். ரயில் போக்குவரத்துச் சேவை அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், பிஹார் மாநிலத்தில் ஜேஇஇ, நீட், என்டிஏ தேர்வர்களுக்காக செப்டம்பர் 15-ம் தேதி வரை 20 சிறப்பு ரயில்கள் விடப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''செப்டம்பர் 2 முதல் 15-ம் தேதி வரை ஜேஇஇ மெயின், நீட், என்டிஏ தேர்வர்களின் வசதிக்காக, பிஹார் மாநிலத்தில் 20 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாகத் தேர்வர்களின் வசதிக்காக, மும்பையில் தேர்வு நாட்களில் சிறப்புப் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x