Published : 02 Sep 2020 08:21 AM
Last Updated : 02 Sep 2020 08:21 AM

புதிய கல்விக்கொள்கையில் 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது: சிபிஎஸ்இ அதிகாரி விளக்கம்

சென்னை

புதிய கல்விக்கொள்கை-2020 குறித்த ஆன்லைன் கருத்துப் பகிர்வு தொடர்பான செய்தி‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செவ்வாய்க்கிழமை வெளியாகியிருந்தது. அதில், சிபிஎஸ்இ சென்னை மண்டல அதிகாரி கே.சீனிவாசன் தெரிவித்த கருத்துகள் இடம்பெற்றிருந்தன.

அதுதொடர்பாக நேற்று அவர் அளித்த விளக்கம் வருமாறு: எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 போன்று 3, 5, 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு கொண்டுவரப்படும் அதில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் தேசிய திறந்தநிலை பள்ளி திட்டத்தில் சேர்ந்து தேர்வெழுதி, பின்னர் மீண்டும் பள்ளியில் படிப்பை தொடரலாம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது தவறு. எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வு தனி. அது எப்போதும்போல் இருக்கும்.

3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பள்ளி அளவில்தான் தேர்வு நடத்தப்படும். இதற்கான வரையறைகளை மாநில அரசு வெளியிடும். இந்த தேர்வு பொதுத்தேர்வு கிடையாது. மாணவர்கள் பெயிலாக்கப்பட மாட்டார்கள். பள்ளியில் நடத்தப்படும் தேர்வு மாணவர்கள் எந்தஅளவுக்கு பாடங்களைப் புரிந்துள்ளனர் என்பதை மதிப்பீடு செய்யவே நடத்தப்படும். யாரையும் தேர்ச்சி அடையச் செய்யக்கூடாது என்ற வகையில் தேர்வு அமைந்திருக்காது.

திறந்தநிலை பள்ளி என்பது முறைசாரா கல்வித்திட்டம். இதுவரை அது 10, 12-ம் வகுப்புக்கு மட்டுமே தேர்வு நடத்தியது. அது 3, 5, 8-ம் வகுப்புகளுக்கும் தேர்வு நடத்தும் என்றுதான் புதிய கல்விக்கொள்கையில் சொல்லப்பட்டுள்ளது என்று சீனிவாசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x