Published : 02 Sep 2020 07:35 AM
Last Updated : 02 Sep 2020 07:35 AM

‘டெட்’ சான்றிதழ் வாழ்நாள் நீட்டிப்பு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்)தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழின் வாழ்நாள் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலால் மூடப்பட்டிருந்த அரசு பொது நூலகங்கள் நேற்று திறக்கப்பட்டன. இந்நிலையில் சென்னைகோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று ஆய்வு செய்தார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 160 நாட்களுக்கு பின் 32 மாவட்டங்களில் உள்ள 3,785 நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து நூலகங்களிலும் புத்தகங்களை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை படிக்கலாம்.

புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய்வதற்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் குழு அமைக்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.

நடப்பு ஆண்டு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 11-ம் வகுப்பு வரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளைத் தேடிவரும்அளவுக்கு, அதன் தரம் தற்போதுஉயர்ந்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

கல்விக்கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் குறித்து பெற்றோர் புகார் அளித்தால் உடனே உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா பாதிப்பைப் பொறுத்து பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார். ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற வர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களுக்கான வாழ்நாள் காலம் 7 ஆண்டுகள்தான். அந்த கால அவகாசம் முடிந்தபின் மீண்டும் அவர்கள் தகுதித் தேர்வை எழுத வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x