Published : 01 Sep 2020 02:53 PM
Last Updated : 01 Sep 2020 02:53 PM

பலத்த பாதுகாப்புக்கிடையில் முதல் ஷிஃப்ட் ஜேஇஇ தேர்வு நடந்தது

பலத்த பாதுகாப்புக்கு நடவடிக்கைகளுக்கு இடையில், பி.ஆர்க். படிப்புக்கான முதல் ஷிஃப்ட் ஜேஇஇ தேர்வு இன்று நடைபெற்றது.

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஜேஇஇ தேர்வு செப் 1-ம் தேதி (இன்று) தொடங்கியது. இத்தேர்வை நாடு முழுவதும் 660 மையங்களில் 9 .53 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்தில் 53,765 தேர்வர்களுக்காக 34 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இளங்கலைக் கட்டிடவியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு இன்று காலை 9 முதல் 12 மணி வரை நடைபெற்றது. இப்படிப்புக்காக இந்த ஆண்டு 1,38,409 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். மதியம் 3 முதல் 6 மணி வரை பி.ப்ளானிங் படிப்புக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்தப் படிப்புக்காக 59,003 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

முதல் ஷிஃப்ட் தேர்வு முடிந்ததும் மேசை, நாற்காலிகள் என அனைத்தும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டன. கரோனா தொற்றை அடுத்து, தேர்வர்கள் அனைவருக்கும் முகக்கவசம், கையுறை, சானிடைசர், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை என்டிஏ கட்டாயமாக்கியது.

வழக்கமாக ஆண்டுதோறும் ஒருமுறை நடைபெற்று வந்த ஜேஇஇ மெயின் தேர்வு, கடந்த ஆண்டுதான் வருடத்துக்கு இருமுறை என மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து 2 தாள்களாக இருந்த ஜேஇஇ மெயின் தேர்வை, தேசியத் தேர்வுகள் முகமை 3 தாள்களாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x