Published : 29 Aug 2020 04:46 PM
Last Updated : 29 Aug 2020 04:46 PM

நீட், ஜேஇஇ தேர்வுகளை முன்னிட்டு பொதுப் போக்குவரத்து, ஓட்டல், விடுதிகளுக்கு அனுமதி: ஜார்க்கண்ட் அரசு அறிவிப்பு

நீட், ஜேஇஇ தேர்வுகளை முன்னிட்டு ஜார்க்கண்டில் பொதுப் போக்குவரத்து, ஓட்டல்கள், விடுதிகள் செயல்பட அனுமதி அளித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் செப்டம்பர் 1 மற்றும் 6 தேதிகளில் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 27-ம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வும், செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வும் நடத்தப்பட உள்ளது. நீட் தேர்வுக்குத் தேசிய அளவில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜேஇஇ நுழைவுத் தேர்வை (மெயின்) எழுத 6,58,273 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்தச் சூழலில், கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிஹார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று தேர்வுகளை நடத்தும் என்டிஏ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் பொதுப் போக்குவரத்து, உணவகங்கள், விடுதிகள் செயல்பட அனுமதி அளித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஹேமந்த் சோரன் கூறும்போது, ''மாநிலம் முழுவதும் ஒரு மாதத்துக்கு அதாவது செப்டம்பர் 30-ம் தேதி வரை ஓட்டல்கள், உணவகங்கள், விடுதிகள் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

பொதுப் போக்குவரத்தும் தொடங்கப்பட உள்ளது. கரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்து வந்த தேர்வர்களுக்கும் நுழைவுத் தேர்வுகளை எழுத அனுமதி அளிக்கப்படுகிறது. தேர்வு ஹால் டிக்கெட்டுகளே அவர்களுக்கான பாஸ் சீட்டாகும். உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து தனி அனுமதி எதையும் அவர்கள் பெற வேண்டியதில்லை.

அதேபோல நுழைவுத் தேர்வு எழுத மாநிலம் விட்டு மாநிலம் செல்லும்/ வரும் மாணவர்களுக்கு 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்துதல் காலத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் கட்டுப்பாட்டுப் பகுதியில், மால்களைத் திறக்கவும் உடனடி அனுமதி வழங்கப்படுகிறது.

டாஸ்மாக் பார், கல்வி நிறுவனங்கள், சினிமா, கலாச்சார, சமூக மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் ஆடிட்டோரியங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

ஜேஇஇ தேர்வர்களுக்கு இலவசமாகப் போக்குவரத்து மற்றும் தங்குவதற்கு வசதிகள் செய்து தரப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x