Published : 27 Aug 2020 07:23 AM
Last Updated : 27 Aug 2020 07:23 AM
தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களில் சேர இன்று (வியாழக்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர) நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் சுயநிதி பள்ளிகளில் 2020-21-ம் கல்வி ஆண்டுக்குரிய மாணவர் சேர்க்கையில் இந்த 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை 27-ம் தேதி (இன்று) முதல் செப்டம்பர் 25 வரை நடைபெற உள்ளது.
இந்த 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர், தங்கள் குழந்தைகளின் விண்ணப்பங்களை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் பள்ளியின் வாயிலாகவும் பதிவேற்றம் செய்யலாம். மேலும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம், மாவட்ட திட்ட அலுவலகம், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள், வட்டார வள மையங்கள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள மையங்களிலும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT