Last Updated : 26 Aug, 2020 06:51 AM

 

Published : 26 Aug 2020 06:51 AM
Last Updated : 26 Aug 2020 06:51 AM

கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: ஆங்கிலம், பொருளியல், உளவியல் படிப்புகளுக்கு அதிக வரவேற்பு- 20 சதவீதம் இடங்களை அதிகரிக்க அரசு திட்டம்

சென்னை

கலை, அறிவியல் கல்லூரி மாணவர்சேர்க்கையில் ஆங்கிலம், பொருளியல், உளவியல் பாடங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதாக கல்வியாளர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கல்லூரிக் கல்விஇயக்குநரகத்தின்கீழ் இயங்கும் 1,547 அரசு, அரசு உதவி மற்றும்தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில்3.1 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கிடையே கரோனா தொற்றால் நடப்பு ஆண்டு கலை, அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை இணையவழியில் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து இணையவழியில் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அரசுக் கல்லூரி மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 28 முதல்செப்.4 வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நடப்பு ஆண்டு பொருளியல், உளவியல் பாடங்களுக்கு வழக்கத்தைவிட அதிக வரவேற்பு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து கல்வியாளர்கள் செல்வக்குமார், அஸ்வின் ஆகியோர் கூறியதாவது:

கலைப்பிரிவில் வணிகவியல், பொருளியல், ஆங்கிலம், உளவியல் பாடங்களுக்கும், அறிவியல் பிரிவில் பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல், உயிரியல், வேதியியல் பாடங்களுக்கும் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

தேவை அதிகரிப்பு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பொருளியல், உளவியல் பாடங்களில் மாணவர் சேர்க்கை மிக உயர்ந்துள்ளது. குறிப்பாக உளவியல் பாடத்தில் பெண்கள் அதிக அளவு சேர்ந்துள்ளனர். உலக அளவில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் எதிர்காலத்தில் இந்தத் துறை சார்ந்த நிபுணர்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன.

இதுதவிர வங்கிகள் உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கும் உதவியாக இருப்பதால் பொருளியல் பாடப்பிரிவை நோக்கி மாணவர்கள் கவனம் திரும்பியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசுக் கல்லூரி பேராசிரியர் வீரமணி கூறும்போது, ‘‘கிராமப்புறங்களில் பெரும்பாலான மாணவர்கள் அரசுப் பணிகளுக்கு செல்வதற்கு விரும்புகின்றனர். அதற்கான போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கான முன் தயாரிப்பாக வரலாறு, அரசியல் அறிவியல் உள்ளிட்ட கலைப்பிரிவு பாடங்களுக்கு முன்னுரிமை அளித்து கல்லூரிகளில் சேருகின்றனர். மேலும், பிசிஏ எனப்படும் கணினி பயன்பாடு பாடத்திலும் சேர்க்கை உயர்வாக காணப்படுகிறது’’ என்றனர்.

தனியார் கல்லூரி முதல்வர்கள் சிலர் கூறும்போது, ‘‘எப்போதும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கைதான் முதலில் முடிவடையும். ஆனால், நடப்பு ஆண்டு வணிகவியல், பொருளியல், ஆங்கிலம் உள்ளிட்ட கலைப்பிரிவு பாடங்களுக்கான சேர்க்கை ஓரிரு நாட்களில் முடிந்துவிட்டன. அதேநேரம் சமீபகாலமாக இயற்பியல் பாடப்பிரிவில் சேர்க்கை தொடர்ந்து சரிந்துவருகிறது’’ என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியதாவது: மாநிலம் முழுவதும் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில்சேர 3.12 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதில் 2.25 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர்.

விண்ணப்பித்தவர்களில் 20முதல் 30 சதவீதம் பேர் பொருளியல், ஆங்கிலம், உளவியல் பாடங்களுக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இதேநிலைதான் தனியார் கல்லூரிகளிலும் நிலவுகின்றன. சமீப காலமாகவே, கலை, அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் 2019-20-ம்கல்வி ஆண்டில் அனைத்து கல்லூரிகளிலும் இடங்களின் எண்ணிக்கை 40 சதவீதம் உயர்த்தப்பட்டது. நடப்பு ஆண்டும் அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளதால் 20 சதவீத இடங்களை கூடுதலாக ஒதுக்கக் கோரிஅரசின் பரிந்துரைக்கு அனுப்பிஉள்ளோம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x